search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் திருவிழா"

    • துன்பங்களை நீக்கும் கோவிலாக விளங்குகிறது.
    • பழஞ்சிறை தேவியை வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் அம்பலந்தரா என்னும் இடத்தில் பழஞ்சிறை தேவி கோவில் அமைந்துள்ளது.

    700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் துன்பங்களை நீக்கும் கோவிலாக விளங்குகிறது. பழஞ்சிறை தேவியை வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை என்றும், இந்த பிறவியிலேயே துன்பங்கள், தொல்லைகள் அகலும் என்பது நம்பிக்கை. ஆதிக் கடவுளான சிவபெருமான், ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல் என அனைத்திற்கும் பரம்பொருளாக திகழ்பவர். அவரது அன்புக்குரிய மனைவி, சக்தி சொரூபிணியான பார்வதிதேவி ஆவார்.

    உயிர்களை பேணிக்காத்து, அன்பர்களுக்கு துன்பம் ஏற்படுகின்ற வேளையில் துயர் துடைப்பவள் அந்த தேவி. ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் மலைகளும், ஆழங்களும் (பள்ளத்தாக்குகள்) நிரம்பப் பெற்றிருந்தது கேரளம். அதனால் அந்த பகுதி 'மலையாளம்' என்று அழைக்கப்பட்டது.

    அப்போது திருவனந்தபுரம் என்ற பகுதி பெரும் காடாகக் கிடந்தது. அதனால் அந்த இடத்தை 'அந்தன் காடு' என்று அழைத்தனர்.

    உயரமான மலைகளுக்கு இடையே தோன்றி, பல இடங்களின் மண்ணை தழுவியபடி அந்தன் காடு வழியாக ஓடிய நீலாற்றின் கரையில், யோகீஸ்வரர் என்ற முனிவர் பார்வதி தேவியை நினைத்து தவம் செய்தார். அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ்ந்திடவும், ஆன்மிகம் தழைத்து வளர்ந்திடவும், தான் முக்தி அடைந்திடவும் அந்த தவத்தை செய்து கொண்டிருந்தார்.

    முனிவரின் தவத்தை மெச்சிய பார்வதி தேவி, அவர் முன்பாகத் தோன்றி, "இந்த இடத்திலேயே என்னை பிரதிஷ்டை செய்து வழிபடுக.

    இங்கு வந்து என்னை வழிபடும் பக்தர்கள் அனைத்து நலனும் பெற்றிடுவர்" என்று கூறி மறைந்தாள். தனக்கு அம்பாள் எந்த வடிவத்தில் காட்சி தந்து அருள்புரிந்தாலோ, அதே வடிவில் ஒரு சிலையைச் செய்து வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார், முனிவர். பின்னர் அவர் முக்தி நிலையை அடைந்தார்.

    நாளடைவில் அந்த வனப்பகுதி அழிந்து போனது. காடாக இருந்த இடத்தில் சிறைச்சாலை அமைக்கப்பட்டது. கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த சிறைச்சாலை பல ஆண்டுளுக்கு பின்னர் காலநிலை மாற்றத்தினாலும், பராமரிப்பு இன்றியும் அழிந்து போனது. ஆனால் பல நெடுங்காலமாக இங்கு சிறைச்சாலை இருந்ததைக் கொண்டு, அந்த பகுதி 'பழஞ்சிறை' என்று அழைக்கப்பட்டது.

    ஒரு கட்டத்தில் சிறைச்சாலை இருந்த இந்த பகுதியில் அதற்கு முன்பாகவே ஒரு அம்மன் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலை மீட்டெடுக்கப்பட்டு இங்கு ஆலயம் அமைக்கப்பட்டது. பழமையான சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள தேவி என்பதால் இந்த அன்னையை 'பழஞ்சிறை தேவி' என்றே பெயரிட்டு அழைத்தனர்.

    இங்கு அருள்பாலிக்கும் அம்பாளின் முன்பாக சிலையை வடிவமைத்த யோகீஸ்வர முனிவரும் வீற்றிருக்கிறார். கொடுங்கல்லூர் பகவதி அம்மனின் அம்சமாக இங்குள்ள பழஞ்சிறை தேவி கருதப்படுகிறாள்.

     இந்த ஆலயத்தில் அழகு வண்ணச் சிற்பங்கள், கண்களையும் கருத்தையும் கவரும் விதமாக அமைந்துள்ளன. கர்ப்பக் கிரகத்தை, 17 யானைகளும், 6 சிங்கங்களும் தாங்கியிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேல் பகுதியில் மும் மூர்த்திகள் தங்கள் தேவியர்களுடனும், கங்கையுடன் காட்சி தரும் சிவபெருமான் உருவமும் காணப்படுகிறது. பிரகாரத்தில் தசாவதாரக் காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன. இங்கு நவக்கிரகங்கள், ரத்த சாமுண்டி, பிரம்ம ராட்சசன், மாடன் திருமேனிகளும் இருக்கின்றன.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்வு மிகவும் புகழ்பெற்றது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலை போல, இந்த கோவிலில் பொங்கல் வைபவம் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. பெண்கள் பலரும் கூடி நின்று பொங்கல் வைக்கும் இந்த விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    இந்த விழாவைத் தவிர, மேலும் பல விழாக்களும் பழஞ்சிறை தேவி கோவிலில் நடைபெறுகின்றன. அவற்றில் மாசி மாதம் நடைபெறும் விழா முக்கியமானது. அந்த விழாவின் போது 'கன்னியர் பூஜை' என்ற பூஜை நடைபெறும். அம்மன் சிறு வயது தோற்றத்தில் இருப்பது போல பெண் குழந்தைகள் வேடமிட்டு புத்தாடை அணிந்து இந்த பூஜையில் பங்கேற்பார்கள்.

    இந்த நாளில் பெண்களும் தங்களின் தாலி பாக்கியத்திற்காக சிறப்பு மாங்கல்ய பூஜையை நடத்துகிறார்கள். அதே போல் இங்கு நடைபெறும் பூதபலி பூஜையும், பஞ்சபூத பொங்கல் விழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பூதபலி பூஜை என்பது நள்ளிரவில் நடைபெறும் பூஜையாகும். அம்மனுடைய அருள் பெற்ற ஆலய பூசாரி, தனது பாதங்களில் சிலம்பு அணிந்து, கரங்களில் திரிசூலம் ஏந்தி, மூவர்ண பட்டு உடுத்தி வருவார்.

    கோவிலின் முன்பாக நின்று நடனமாடியபடியே பின்னோக்கிச் செல்வார். அங்கிருக்கும் பூத கணங்களுக்கு நேராக காலத்திற்கு ஏற்றபடி திக்கு பலி நடத்தி அம்மனை வழிபடுவார். இந்த இரவு பூஜையில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.

    பஞ்சபூத பொங்கல் விழா என்பது மாசி மாதத்தின் 7-ம் நாள் பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும். பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்ச பூதங்கள் என்கிறோம். மண்ணால் உருவாக்கப்பட்ட பானையில், கைகுத்தல் அரிசியை போடுவார்கள். பானையில் நீர் விட்டு, நெருப்பு மூட்டி பொங்கல் தயார் செய்வார்கள். காற்று என்னும் வாயுவை குறிக்கும் வகையில் அம்மனின் வாழ்த்தொலி, குரவை ஒலி ஆகியவை எழுப்பப்படும்.

    பொங்கல் தயாரானதும், வான் என்னும் ஆகாயம் வழியாக பொங்கல் பானைகள் மீது மலர் தூவப்படுகிறது. இந்த ஐந்து தத்துவங்களும் அடங்கியதால் அதற்கு 'பஞ்சபூத பொங்கல்' என்று பெயர் பெற்றது. நவராத்திரி விழா காலங்களில் இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அந்த நாட்களில் கோவிலின் முன்பு அணையாத ஹோமம் நடத்தப்படுகிறது.

    நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் 'சண்டி ஹோமம்' நடத்தப்படும். மார்கழி மாதத்தில் அன்னைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், சித்திரை புத்தாண்டு, தமிழ் வருட பிறப்பில் சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கும். இத்தலத்தில் அருளும் அன்னையின் சன்னிதானத்திற்கு வந்து, சுயம்வர அர்ச்சனை நடத்தினால், திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை. அருள்சுரக்கும் இந்த அன்னையின் ஆலயத்தில் பங்குனி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தன்று திருவிழா தொடங்கும்.

    விழாவில் ஒவ்வொரு நாளும் சில பக்தர்கள் தங்கள் இனிய குரலில் 'தோற்றப்பாட்டு' என்னும் பாடலைப் பாடுவார்கள். அன்னையின் அவதார மகிமை இந்த பாடலில் வர்ணிக்கப்படுகிறது. இந்தப் பாடலை பாடுபவர்கள் அதற்கு முன்பாக 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.

    இந்த பாடலைக் கேட்டாலே அனைத்து பாவங்களும் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோவிலில் தினமும் அதிகாலை 5.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

    2024-ம் ஆண்டுக்கான பொங்கல் திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. காலை 10.55 மணிக்கு தேவியை பாடி காப்பு கட்டி குடியிருத்தி விழா தொடங்குகிறது. அன்று மாலை 6.30 மணிக்கு கேரள கல்வித் துறை மந்திரி வி.சிவன் குட்டி கலாசார கலை விழாவை தொடங்கி வைக்கிறார். மேயர் ஆர்யா ராஜேந்திரன் குத்து விளக்கேற்றி வைப்பார்.

    திருவிழாவின் முன்னோடியாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலையில் புண்யாகம், பிரகார சுத்தி, திரவ்யகலச பூஜை ஆகியவை நடைபெறும். விழா நாட்களில் தினமும், காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், உஷபூஜை, கணபதி ஹோமம், திரவ்ய கலசாபிஷேகம் நடைபெறும். மாலையில் பஞ்சாலங்கார பூஜை, புஷ்பாபிஷேகம், மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதே போல் தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்படும்.

    விழாவையொட்டி, 17-ந்தேதி இரவு 9 மணிக்கு களமெழுத்தும் சர்ப்பபாட்டும், 18-ந்தேதி இரவு 8.30 மணிக்கு அஷ்டமங்கல்ய பூஜை நடைபெறும்.

    7-ம் திருவிழாவான 19-ந்தேதி அன்று பிரசித்திப் பெற்ற பொங்கல் வழிபாடு நடக்கிறது. அன்று காலை வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு பகல் 10.25 மணிக்கு பொங்கல் வழிபாடு தொடங்குகிறது.

    மதியம் 1 மணி முதல் தாலப்பொலி உருள் நேர்ச்சை, பிற்பகல் 2.15 மணிக்கு பொங்கல் நிவேத்தியம் செய்யப்படும். இரவு 7.45 மணிக்கு குத்தியோட்டம், சுருள் குத்து. இரவு 10.35 மணிக்கு யானை மீது தேவி பவனி நடக்கிறது.

    20-ந்தேதி இரவு 7.40 மணிக்கு காப்பு அவிழ்ப்பு, 12 மணிக்கு குருதி தர்ப்பணத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் மோகன்தாஸ், செயலாளர் விஜயன், துணை தலைவர் சந்திர சேனன், இணை செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.

    • மாசி மக திருவிழா மற்றும் பொங்கல் விழா 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கிடாய் வெட்டி வழிபட்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தெங்குமரஹாடா அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதி கருவண்ணராயர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இந்த கோவில் உள்ளது.

    வருடம் தோறும் மாசி மக திருவிழா மற்றும் பொங்கல் விழா 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு சத்திய மங்கலம், கோயமுத்தூர், சேலம், கரூர் திருப்பூர், ஈரோடு, பெருந்துறை, கடம்பூர் மலைப்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கிடாய் வெட்டி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.

    பக்தர்கள் அடர்ந்த வன ப்பகுதிக்குள் வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனால் இந்த வருட திருவிழாவுக்கு நீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    அதன்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் போதை தரும் பொருட்கள் எதையும் எடுத்துச் செல்லக்கூடாது, வனம் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு திருவிழாவை நடத்த வேண்டும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் பாலித்தீன் பொருட்களை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லக்கூடாது, பாதுகாப்பு முன் எச்சரிக்கையாக மோயார் ஆறு மற்றும் அதன் அருகில் உள்ள பகுதி களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட 20 வகை யான நிபந்தனைகள் குறிப்பிட்டு இருந்தது.

    இந்நிலையில் இன்று கரு வண்ணராயர் கோவில் மாசி மக மற்றும் பொங்கல் திருவிழா தொடங்கியது. இன்று முதல் 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனை அடுத்து இன்று அதிகாலை முதலே சத்திய மங்கலத்தை அடுத்துள்ள காராச்சி குறை சோதனை சாவடியில் 20 வண்டிகளுடன் பக்தர்கள் வந்தனர்.

     வண்டிகளை பவானிசாகர் வனத்துறையினர் தீவிரமாக சோதனை செய்து பின்னர் வனப்பகுதிக்குள் அனுப்பினர். கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கிடாய் வெட்டி வழிபட்டனர். 300-க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிலில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து பெரிய பேனர் வைக்கப்பட்டுள்ளது.

    • பொங்கல் திருவிழாயொட்டி கணபதி பூஜை மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.
    • தொடர்ந்து பிரசாதம் வழங்குதலும், அன்னதானமும் நடைபெற்றது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி ஈரோடு ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் ஆடி மாதம் பொங்கல் திருவிழாயொட்டி கடந்த 3-ந் தேதி கணபதி பூஜை மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து பெருந்தலையூர் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும், இரவு 8 மணி அளவில் சங்கு பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று காலை 7 மணி அளவில் பொங்கல் வைத்தலும், 8 மணிக்கு மகா அபிஷேகம் அதைத்தொடர்ந்து முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்து வருகிற நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    12 மணி அளவில் காமாட்சி அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து மகா தீபாரதனையும் தொடர்ந்து பிரசாதம் வழங்குதலும், அன்னதானமும் நடைபெற்றது.

    சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம் தாலிச் சரடு வழங்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் மஞ்சள் நீராட்டு விழாவும், மறு பூஜையும் நடைபெற்றது.

    விழாவில் ஈரோடு, பவானி, அந்தியூர், கணக்கம்பாளையம், கோபி, பெருந்துறை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து நூற்றுக்கணக்கான கலந்து கொண்டு காமாட்சி அம்மனின் அருள் பெற்றார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தார்கள்.

    • கோவிலில் 14ம் ஆண்டாக பொங்கல் திருவிழா நடைபெற்றது.
    • பொங்கல் திருவிழாவை முன்னிட்டு காவடி ஆட்டம் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் ஏரி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 14ம் ஆண்டாக பொங்கல் திருவிழா நடைபெற்றது. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அய்யம்பாளையம் ஊர் பொதுமக்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்தனர்.

    பின்னர் மாவிளக்கு எடுத்து வந்து அலங்கார சிறப்பு பூஜைகள் செய்தனர். பொங்கல் திருவிழாவை முன்னிட்டு காவடி ஆட்டம் நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அய்யம்பாளையம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாவிளக்கு பூஜை, வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அம்மனுக்கு பால்குடம், தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகங்கள் நடைபெற்றன.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தாம்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாவிளக்கு பூஜை, வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று காமாட்சி அம்மனுக்கு பால்குடம், தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகங்கள் நடைபெற்றன. நேற்று மாலை அலகு குத்துதல் நிகழ்ச்சி, பொங்கல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று வியாழக்கிழமை சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை தீத்தாம்பாளையம் மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் செய்கின்றனர்.

    • 200க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.
    • நாளை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் புகழ்பெற்ற திரவுபதி அம்மன் - தர்மராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பொங்கல் விழா நடைபெறுகிறது. இதனையொட்டி கடந்த மாதம் 26-ந்தேதி புண்ணியார்ச்சனை, கொடி மரம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

    நேற்று காலை குண்டம் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தர்மராஜா பொங்கல் விழாவும், மாவிளக்கு ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இரவு ஆன்மிக சொற்பொழிவாளர் ஆனந்த் கிருஷ்ணனின் சொற்பொழிவு நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை 5 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். ஓம் சக்தி பராசக்தி கோஷம் முழங்க பெண்கள், சிறு வர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என பலர் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    அதனைத்தொடர்ந்து உச்சிகால பூஜை நடை பெற்றது. மாலையில் கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் கம்பத்து ஆட்டம் நடைபெறுகிறது. நாளை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • பரமத்திவேலூர் தாலுகா ஆனங்கூர் முத்து மாகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
    • ஒவ்வொறு வருடமும் சித்திரை மாத பவுர்ணமியன்று இக்கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆனங்கூர் முத்து மாகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. ஒவ்வொறு வருடமும் சித்திரை மாத பவுர்ணமியன்று இக்கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல், நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு முத்து மாகாளியம்மனுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகமும், மலர் அலங்காரமும் செய்யப்பட்டது.

    விழாவில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பொங்கல் வைத்து பொங்கல் பூஜையும், மாவிளக்குகளை கொண்டு சென்று மாவிளக்கு பூஜையும் செய்தனர். அதனைத் தொடர்ந்து வானவேடிக்கை நடைபெற்றது.

    நள்ளிரவு 12 மணியளவில், முத்து மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் திருவீதி உலா வந்தார். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள், அம்மனுக்கு தேங்காய் உடைத்து, பழம் வைத்து வழிபட்டனர்.

    • இன்று மாலையில் புண்யாகம், பிரகார சுத்தி, திரவ்யகலச பூஜை நடைபெறும்.
    • ஏப்ரல் 3-ந்தேதி பகல் 11.25 மணிக்கு பொங்கல் வழிபாடு நடக்கிறது.

    திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் 3 கி.மீ தொலைவில் அம்பலந்தரா என்னும் இடத்தில் அமைந்துள்ளது பழஞ்சிறை தேவி கோவில். 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் பக்தர்களின் துன்பங்கள் நீக்கும் கோவிலாக விளங்கி வருகிறது. பழஞ்சிறை தேவியை வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை என்றும், இப்பிறவியிலேயே துன்பங்கள், துயரங்கள், தொல்லைகள் அகலும் என்பது நம்பிக்கை. ஆதி கடவுளான சிவபெருமான், ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல் என அனைத்திற்கும் பரம்பொருளாக திகழ்பவர். அவரது அன்புக்குரிய சக்தி சொரூபினியான பார்வதிதேவி. உயிர்களை பேணிக்காத்து, அன்பர்களுக்கு துன்பம் ஏற்படுகின்ற வேளையில் துயர் துடைப்பவள்.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத இறுதியில் பொங்கல் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது மிகவும் புகழ்பெற்றது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலை போல, இந்த கோவிலும் பொங்கல் விழா என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. பெண்கள் பலரும் கூடி நின்று பொங்கல் வைக்கும் இந்த விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    2023-ம் ஆண்டுக்கான பொங்கல் திருவிழா நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அதன்படி நாளை காலை 9.20 மணிக்கு தேவியை பாட்டுபாடி காப்புகட்டி குடியிருத்தி விழா தொடங்குகிறது. மாலை 6.30 மணிக்கு கேரள கல்வித்துறை மந்திரி வி.சிவன் குட்டி கலாசார கலை விழாவை தொடங்கி வைக்கிறார்.

    திருவிழாவை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) மாலையில் புண்யாகம், பிரகார சுத்தி, திரவ்யகலச பூஜை ஆகியவை நடைபெறும். விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், உஷபூஜை, கணபதி ஹோமம், திரவ்யகலசாபிஷேகம், மதியம் அன்னதானம், மாலையில் பஞ்சாலங்கார பூஜை, புஷ்பாபிஷேகம், சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெறுகிறது.

    7-ம் திருவிழாவான அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி காலை வழக்கம் போல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு பகல் 11.25 மணிக்கு பொங்கல் வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து மதியம் 1 மணி முதல் தாலப்பொலி உருள் நேர்ச்சை, மதியம் 2.20 மணிக்கு பொங்கல் நிவேத்தியம், மாலை 6.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், 6.45 மணிக்கு பஞ்ச அலங்கார பூஜை, 7.20 மணிக்கு குத்தியோட்டம், சுருள் குத்து, இரவு 10.35 மணிக்கு யானை மீது தேவி பவனி வருதல், 4-ந்தேதி இரவு 7.25 மணிக்கு காப்பு அவிழ்ப்பு, 12 மணிக்கு குருதி தர்ப்பணத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் மோகன்தாஸ், செயலாளர் விஜயன், துணை தலைவர் சந்திர சேனன், இணை செயலாளர் விஜயகுமார் உள்பட நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.

    • மாசிக்கொடை விழா மார்ச் 5-ந்தேதி தொடங்குகிறது.
    • இந்த விழா 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு கேரள பெண் பக்தர்கள் இரு முடிக்கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு மாசிக்கொடை விழா அடுத்த மாதம் (மார்ச்) 5 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி வரை நடக்கிறது. விழா நடைபெறும் 10 நாட்களிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருவிழா தொடங்குவதற்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் நேற்று முதல் கேரள பக்தர்கள் மண்டைக்காட்டிற்கு வர தொடங்கி உள்ளனர். அவர்கள் சுற்றுலா வேன்கள், பஸ்களில் வந்தனர். கேரள பக்தர்கள் கடலில் கால் நனைத்து கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர்.

    கேரள பக்தர்களின் வருகையால் மண்டைக்காடு கோவில் சன்னதி, கோவில் வளாகம், பீச் சந்திப்பு, கடற்கரை போன்ற பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா இப்போதே களைகட்ட தொடங்கியுள்ளது.

    • தமிழ்நாடு வாழ்க என்ற முழக்கத்துடன் பெண்கள் முளைப்பாரி கொண்டு வந்து கும்மி அடித்து வழிபட்டனர்.
    • தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது.

    அமீரக தமிழ் சங்கம் மற்றும் தமிழ்நாடு வெளிநாட்டினர் பெண்கள் சங்கம் (TEWA) இணைந்து நடத்திய தித்திக்கும் பொங்கல் திருவிழா துபாய் அல் கிஸ்சாஸ் பகுதியில் அமைந்துள்ள வுட்லம் பள்ளி மைதானத்தில் டாக்டர். ஷீலா தலைமையில் நடைபெற்றது. பொங்கல் வைத்து, தமிழ்நாடு வாழ்க என்ற முழக்கத்துடன் பெண்கள் முளைப்பாரி கொண்டு வந்து கும்மி அடித்து வழிபட்டனர். தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது.

    இதில் தலைமை விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் Dr. தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் துபாய் ஈமான் கலாச்சார மையம் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்கள் அரவிந்தன் குழும நிறுவனர் பிரபாகர், சல்வா குரூப்ஸ் நிறுவனர் பகவதி, செய்தியாளர்கள் அஸ்கர், நஜீம் மரிக்கா, கமால் K.V.L, ராஜு, கமால் பாட்சா பாலு, சாகுல் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியினை ஜெகநாதன் மற்றும் அருணா தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

    • கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    • நிகழ்ச்சியில் இயற்கை விவசாயம் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

    சார்ஜா:

    கிரீன் குளோபல் மற்றும் சார்ஜா புடினா லூலூ இணைந்து நடத்திய பிரமாண்ட பொங்கல் திருவிழா, சார்ஜா புடினா லூலூ ஹைப்பர் மார்க்கெட்டில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கோலப் போட்டி, சிறுவர்களுக்கான வண்ணம் தீட்டுதல், ஓவிய போட்டி மற்றும் ஆண்கள், பெண்கள், சிறுவர்களுக்கான கலாச்சார உடை அணிவகுப்புகள் மற்றும் தமிழக பாரம்பரிய பரதம், சிலம்பம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஈமான் கலாச்சார மையம் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், அன்வர் குரூப்ஸ் ஆப் கம்பெனி உரிமையாளர் அன்வர்தீன், Sarab engineering உரிமையாளர் முஹமது அஸ்ஹர், S Events ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    இதில் இயற்கை விவசாயம் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்கள். வணக்கம் Habibi குழுவினர் சார்பாக விழிப்புணர்வு நாடகம் நடத்தினார்கள்.

    இந்த நிகழ்வினை சமீர் மற்றும் ஆன்ட்ரியா தொகுத்து வழங்கினர், கிரீன் குளோபல் முனைவர் டாக்டர் ஜாஸ்மின் மற்றும் அல்மாஸ் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


    • செவ்வாய்கிழமை நகரத்தார்களால் செவ்வாய் பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம்.
    • பொங்கல் வைப்பவர்களின் பெயர்களை ஒரு பானையில் போட்டு குலுக்கி எடுப்பார்கள்.

    சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடையநாயகி அம்மன் கோவில் முன்பு ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய்கிழமை நகரத்தார்களால் செவ்வாய் பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நகரத்தார்கள் உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் தவறாமல் வந்து விடுவார்கள். கோவிலுக்கு முன்பாக உள்ள பொட்டலில் குடும்பத்திற்கு ஒரு புள்ளி என்ற கணக்கில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.

    ஒரு குடும்பத்தில் உள்ள ஆணுக்கு திருமணம் முடிந்தவுடன் அவர்கள் "ஒரு புள்ளியென" கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.

    இதில் பொங்கல் வைப்பவர்களின் பெயர்களை ஒரு பானையில் போட்டு குலுக்கி எடுப்பார்கள். அதில் வரும் நபர் முதன்முதலில் பொங்கல் வைப்பார். அதன்பின்னர் தான் மற்றவர்கள் பொங்கல் வைப்பார்கள்.

    இந்த ஆண்டு நகரத்தார் சார்பில் 914 பேர் பொங்கலிட்டனர்.இதே போல் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களும் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதால் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தனது குடும்பத்துடன் வந்து பார்த்தார்.

    ×